நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 91ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மலர்தூவி மரியாதை

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 91ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது உருவப்படத்திற்கு துணை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பிறந்த நாள் விழா இந்த ஆண்டு முதல் அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என ஏற்கெனவே அரசு அறிவித்திருந்தது. அதன்படி அவரது 91ஆம் ஆண்டு பிறந்த நாள், இன்று அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதை முன்னிட்டு, சென்னை அடையாறில் உள்ள சிவாஜி கணேசன் மணி மண்டபத்தில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மரியாதை செலுத்தினார்.

சிவாஜி கணேசன் உருவப்படத்திற்கு அமைச்சர்களும் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் நடிகர்கள் பிரபு, விக்ரம் பிரபு உள்ளிட்ட சிவாஜி குடும்பத்தார், நடிகர் விஜயகுமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜு, அரசு உறுதியளித்தபடி, சிவாஜி கணேசன் பிறந்த நாள் இந்த ஆண்டு முதல் அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது என்றார். கடற்கரை காமராஜர் சிலையில் இருந்து சிவாஜி சிலை அகற்றப்பட்டதற்கும் அரசுக்கும் தொடர்பில்லை என்றும், நீதிமன்ற உத்தரவினால்தான் அகற்றப்பட்டது என்றும் அவர் குறிப்பிட்டார்.

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் பிரபு, சிவாஜி கணேசன் சிலையின் கீழ், மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் பெயர் விரைவில் பொறிக்கப்படும் என அரசு தரப்பில் உறுதி கொடுத்திருப்பதாக கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *