தமிழக அரசுக்கு எதிராக திமுக சார்பில் அறிவித்த போராட்டத்துக்கு அனுமதி வழங்குவது தொடர்பாக, அந்தந்த மாவட்ட எஸ்.பி.க்கள் முடிவு செய்துகொள்ளலாம் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக அரசுக்கு எதிராக, மாவட்ட தலைநகரங்களில் வரும் 3 மற்றும் 4ஆம் தேதிகளில் கண்டனப் பொதுக்கூட்டங்களும், ஆர்ப்பாட்டங்களும் நடைபெற இருப்பதாக திமுக அறிவித்தது. இதற்கு அனுமதி கோரி மனு அளித்தும், பல மாவட்ட நிர்வாகங்கள், மனுவை நிராகரித்துவிட்டதாகவும், ஒரு சில மாவட்டங்களில் மனு மீது முடிவெடுக்காமல் காலதாமதம் செய்வதாகவும் கூறி, திமுக சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடப்பட்டது.
இந்த வழக்கு, நீதிபதி ஆர்.மகாதேவன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, போராட்டம் நடத்த அனுமதி கோரி சனிக்கிழமைதான் மனு அளித்துள்ளதால், வழக்கை ஒருவாரம் ஒத்திவைக்கலாமா என கேள்வி எழுப்பினார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்த திமுக வழக்கறிஞர், பல இடங்களில் ஒரு வாரத்திற்கு முன்னதாகவே, மனு அளித்துவிட்டதாக வாதிட்டார். மேலும், மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் வேண்டுமென்றே கால தாமதம் செய்வதாகவும் திமுக வழக்கறிஞர் குற்றஞ்சாட்டினார்.
இதையடுத்து, திமுக மனு தொடர்பாக, தமிழக அரசும், டிஜிபியும் வரும் 3ஆம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி, திமுகவின் போராட்டத்துக்கு குறைந்த நாட்களே இருப்பதால், அனுமதி அளிப்பது குறித்து அந்தந்த மாவட்ட எஸ்.பி.க்களே முடிவு செய்யலாம் எனக் கூறி வழக்கை ஒத்திவைத்தார்.