இந்தோனேசியாவில் நிலநடுக்கத்திற்கு பலியானோர் எண்ணிக்கை ஆயிரத்து இருநூறாக உயர்வு

இந்தோனேஷியாவில் நிலநடுக்கம் மற்றும் ஆழிப்பேரலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 203 ஆக உயர்ந்துள்ளது.

இந்தோனேஷியாவில் கடந்த வெள்ளிக்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7 புள்ளி 5 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தினால் ஆழிப்பேரலைகள் இந்தோனேஷியாவின் பல பகுதிகளைத் தாக்கின. குறிப்பாக சுலாவேசி தீவினை இந்த பேரலைகள் புரட்டிப் போட்டன. 19 அடி உயரத்திற்கு ஆவேசமாக எழுந்த அலைகள் தீவின் கட்டமைப்பையே சீரழித்தன.

பலு மற்றும் டோங்காலா உள்ளிட்ட பகுதிகளில் நிலநடுக்கத்தால் ஆயிரக்கணக்கான கட்டடங்கள் இடிந்து விழுந்தன. பலு  கடலோர பகுதியில் இடிபாடுகளில் 821 சடலங்களும், டோங்கலாவில் 11 சடலங்களும் மீட்கப்பட்டதை அடுத்து பலி எண்ணிக்கை 832 ஆக அதிகரித்திருந்தது. இதில் உயிரிழந்தவர்களில் 61 பேர் வெளிநாட்டவர் ஆவர். இந்நிலையில் இந்தோனேஷிய காவல்துறை தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் இதுவரை ஆயிரத்து 203 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தொடர்ந்து அந்தப் பகுதிகளில் மீட்புப் பணிகள் நடந்து வருகின்றன.

இதனிடையே நிலநடுக்கத்தின் மையப்புள்ளியும், மீன்பிடி நகரமான டோங்காலாவில் இடிபாடுகள் அதிகமாக இருப்பதாலும், தொலைத் தொடர்பு மற்றும் மின்இணைப்பு இல்லாததாலும் மீட்புப் பணியில் கடும் தொய்வு ஏற்பட்டுள்ளது. எனவே இந்த நகரில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என அஞ்சுவதாக இந்தோனேஷிய தேசிய தேடுதல் மற்றும் மீட்புப் பணி இயக்ககத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *