இருசக்கர வாகனத்தை ஓட்டுபவர்கள் மற்றும் பின்னால் அமர்ந்திருப்பவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இருசக்கர வாகனத்தில் செல்வோர்கள் ஹெல்மெட் அணிவது தொடர்பான வழக்கில் வாகனத்தில் செல்லும் இருவரும் அவசியம் ஹெல்மெட் அணிய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதேபோல கார்களில் செல்வோர் அனைவரும் சீட் பெல்ட் அணிய வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் ஹெல்மெட், சீட்பெல்ட் கட்டாயம் என்ற விதிகளை அமல்படுத்தக்கோரிய கே.கே.ராஜேந்திரன் வழக்கு தொடுத்தார். இதையடுத்து ராஜேந்திரன் வழக்கு நீதிபதிகள் மணிக்குமார், சுப்ரமணியம் பிரசாத் அமர்வு முன்பு நேற்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது பேசிய நீதிபதிகள், தமிழகத்தில் மோட்டார் வாகன விதிகளிலேயே ஹெல்மெட், சீட்பெல்ட் கட்டாயம் என்பது உள்ளது. ஹெல்மெட் விதிகளை அரசும், காவல்துறையும் முறையாக அமல்படுத்துவதில்லை, அதனை அமல்படுத்துங்கள் என்று அறிவுறுத்தினர். அத்துடன் இந்த வழக்கில் இன்று உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் இன்று வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஹெல்மெட் மற்றும் சீட் பெல்ட் அணிவதை கட்டாயம் அமல்படுத்துமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர். இருசக்கர வாகனத்தை பொறுத்தவரையில், பின்னால் அமர்ந்திருப்பவர்களும் ஹெல்மெட் அணியவேண்டும் என உத்தரவு பிறப்பித்தனர். மேலும் ஹெல்மெட் அணிவது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தவும், இதுதொடர்பாக செப்டம்பர் 22ஆம் தேதி விரிவான அறிக்கை தாக்கல் செய்யவும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.