மும்பையில் இருந்து புறப்பட்ட ஜெட் ஏர்வேஸ் விமான பயணிகளுக்கு நடுவானில் மூக்கு மற்றும் காது வழியாக ரத்தம் வழிந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டது.
மும்பையில் இருந்து 9W 697 என்ற ஜெட் ஏர்வேஸ் விமானம் 166 பயணிகளுடன் ஜெய்பூருக்கு புறப்பட்டது. நடுவானில் பயணம் செய்து கொண்டிருந்த போது 30க்கும் மேற்பட்ட பயணிகளுக்கு தலைவலி, மூக்கு மற்றும் காது வழியாக ரத்தம் வழிந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து அனைத்து பயணிகளையும் சுவாசக் கருவி அணிய அறிவுறுத்தப்பட்டது. உடனடியாக மீண்டும் மும்பை விமான நிலையத்தில் ஜெட் ஏர்வேஸ் விமானம் தரையிறக்கப்பட்டது. விமானத்தின் உள்ளே காற்றின் அழுத்தத்தை பரிசோதிக்காமல் விமானத்தை இயக்கியதால் பயணிகளுக்கு உடல் உபாதைகள் ஏற்பட்டதாக விமானப் போக்குவரத்துத் துறை இயக்குனரகம் தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட பயணிகள் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.