எஸ்.என்.எஸ். கல்லூரி நிர்வாக இயக்குனர் மீது பாலியல் தொல்லை புகார்

கோவை சரவணம்பட்டி எஸ்.என்.எஸ். கல்வி நிறுவனங்களின் நிர்வாக இயக்குநர் அங்கு பணிபுரியும் பெண் பணியாளர்களுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை சரவணம்பட்டியில் எஸ்.என்.எஸ். கல்வி நிறுவனம் உள்ளது. இக்கல்லூரியின் நிர்வாக இயக்குனரான சுப்ரமணியம், அலுவலகத்தில் பணிபுரியும் 23 வயதான இளம்பெண் ஒருவரை கடந்த இரண்டு ஆண்டுகளாக பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்ததாக சொல்லப்படுகீறது, இதுகுறித்து அப்பெண் சுப்ரமணியத்தின் மகனும், கல்லூரியின் தலைமை நிர்வாகியுமான நளனிடம், கூறியுள்ளார். ஆனால் புகார் குறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்காத நளன், அப்பெண்ணை வேலையை விட்டு நீக்கப்போவதாகவும் , கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அப்பெண், கல்லூரி நிர்வாக இயக்குனர் சுப்ரமணியம் தன்னிடம் அத்துமீறி நடந்து கொள்வதை செல்போன் கேமராவில் ரகசியமாக படம் எடுத்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இத்தகவல் தெரியவந்ததையடுத்து அப்பெண்ணை கல்லூரி நிர்வாகம் பணியை விட்டு நீக்கியுள்ளது. இதையடுத்து தனக்கு பாதுகாப்பு வழங்குமாறும், பாலியல் தொந்தரவு கொடுத்த நிர்வாக இயக்குனர் சுப்ரமணியம் மீது நடவடிக்கை எடுக்குமாறு அப்பெண், கோவை துடியலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். இதையடுத்து பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *