திருப்பூரில் சாதியை காரணம் காட்டி மதிய உணவு சமைக்க எதிர்ப்பு தெரிவித்ததாக 87 பேர் மீது 7 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம் திருமலைக்கவுண்டம்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில், அருந்ததியர் சமூகத்தை சேர்ந்த பாப்பாள் என்ற பெண் சமையல் செய்பவராக கடந்த திங்கள் கிழமை பணியில் சேர்ந்தார். இதையறிந்த அந்த ஊரைச் சேர்ந்தவர்கள், பாப்பாள் சமைக்க கூடாது என்று கூறி, பள்ளியை திறக்கவிடாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் தகவல் அறிந்து வந்த ஊராட்சி ஒன்றிய ஊரக வட்டார வளர்ச்சி அலுவலர் மீனாட்சி, பாப்பாளை பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டார். இதற்கு பல்வேறு அமைப்பினரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், பாப்பாளை மீண்டும் அதே பள்ளியில் பணியமர்த்த திருப்பூர் மாவட்ட சார் ஆட்சியர் உத்தரவிட்டார். மேலும், அந்தப்பள்ளியின் தலைமை ஆசிரியை மற்றும் வட்டார வளர்ச்சி அதிகாரி ஆகியோர் மீது துறை ரீதியான விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதையடுத்து பாப்பாளை பணி செய்ய விடாமல் தடுத்ததாக 87 பேர் மீது 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.