ரயில் மூலம் எடுத்துச் செல்லப்படும் கஜா புயல் நிவாரணப் பொருட்களுக்கு சரக்குக் கட்டண விலக்கு கோரி மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயலுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
கஜா புயல் 4 கடலோர மாவட்டங்கள் உள்ளிட்ட 12 மாவட்டங்களை சீர்குலைத்துவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார். 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும், மக்கள் வீடுகள், உடைமைகள், கால்நடைகள், பயிர்கள் உள்ளிட்டவற்றை இழந்துவிட்டதாகவும் கூறியுள்ளார்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு நாடு முழுவதும் இருந்து நிவாரணப் பொருட்கள் அனுப்பப்படுவதாக தெரிவித்துள்ள அவர், கேரள வெள்ளத்தின்போது அளிக்கப்பட்டதைப் போன்று புயல் பாதித்த மாவட்டங்களுக்கு ரயில் மூலம் அனுப்பப்படும் நிவாரணப் பொருட்களுக்கு சரக்கு கட்டண விலக்கு அளிக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.