தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
விழுப்புரத்தில் பரவலாக சாரல் மழை பெய்து வருகிறது. ஜானகிபுரம், கோலியனூர், முண்டியம்பாக்கம், விக்கிரவாண்டி உள்ளிட்ட பகுதிகளில் அதிகாலை முதலே சாரல் மழை பெய்தது. சில இடங்களில் கனமழையும் பெய்தன. தொடர் மழையால் இதமான சூழல் நிலவி வருகிறது.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே மிதமான மழை பெய்தது. மன்னார்குடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்றிரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. கோட்டூர், வடபாதிமங்கலம், கூத்தாநல்லூர் உள்ளிட்ட இடங்களில், ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மிதமான மழை பெய்தது.
தஞ்சையிலும் கன மழை வெளுத்து வாங்கியது. தஞ்சை, ஒரத்தநாடு, திருவோணம், பட்டுக்கோட்டையில் காலையில் இருந்தே நல்ல மழை பெய்து வருகிறது.
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 2 மணிநேரமாக கனமழை கொட்டித்தீர்த்தது. இதேபோல் அரியமங்கலம், பொன்மலை, காட்டூர், நவல்பட்டு, துவாக்குடி உள்ளிட்ட பகுதிகளிலும் இன்று காலை முதலே மழை வெளுத்து வாங்கியது. மழை காரணமாக திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை ஒளிர செய்து ஓட்டுனர்கள் இயக்கியதோடு, இருசக்கர வாகன ஓட்டிகள் பேருந்து நிறுத்த நிழற்குடையில் தஞ்சம் அடைந்தனர்.