ரபேல் போர் விமான ஒப்பந்த விவகாரம் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் ஆணை.

ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக விசாரணை கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. வழக்கறிஞர்கள் சர்மா, வினீத் தண்டா மற்றும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தெஹ்சீன் பூனாவாலா உள்ளிட்டோர் இந்த மனுக்களை தாக்கல் செய்தனர்.

மனுவில் ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் 59 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு முறைகேடு நடைபெற்றிருப்பதாக குற்றம்சாட்டியுள்ளனர். இந்த மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் எஸ்.கே.கவுல், கே.எம்.ஜோசப் அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ரபேல் போர் விமானங்களை சராசரி விலையை விட கூடுதல் விலைக்கு வாங்க மத்திய அரசு ஒப்பந்தம் செய்திருப்பதாகவும், எனவே ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் வாதிட்டார்.

மத்திய அரசின் சார்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் வேணுகோபால், ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பான தகவல்கள் நாட்டின் பாதுகாப்பு சம்பந்தப்பட்டது என்றும், அதனை வெளியே சொல்ல முடியாது என்றும் வாதிட்டார்.

ஒப்பந்தம் தொடர்பான தகவல்களை வெளியிடுவது, வெளிநாடுகளுடனான உறவில் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் மத்திய அரசின் வழக்கறிஞர் சுட்டிக்காட்டினார். விரைவில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் சிலர் அரசியல் ஆதாயம் பெறவே இதுபோன்ற மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் வேணுகோபால் வாதிட்டார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ரபேல் போர் விமானத்தின் விலை, ஒப்பந்த விவரம், நிர்ணயிக்கப்பட்ட விலை போன்றவற்றை தெரிவிக்க வேண்டாம் என்று உத்தரவிட்டனர். அதேசமயம் ரபேல் போர் விமான கொள்முதல் ஒப்பந்தம் தொடர்பாக எடுக்கப்பட்ட முடிவுகளின் விவரங்களை, சீலிடப்பட்ட கவரில் வைத்து, வருகிற 29ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை வருகிற 31ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *