கஜா புயல் பாதிப்புகளை 3 நாட்கள் ஆய்வு செய்த மத்தியக்குழுவினர், சென்னையில் இன்று பிற்பகலில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளனர்.
கஜா புயல் பாதிப்பால், நாகை, திருவாரூர், தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கான குடிசை வீடுகள், ஓட்டு வீடுகள் சேதமடைந்ததோடு, லட்சக்கணக்கான தென்னை உள்ளிட்ட மரங்களும் வேருடன் சாய்ந்தன.
இது குறித்து ஆய்வு செய்வதற்காக, தமிழகம் வந்த மத்திய உள்துறை இணைச் செயலாளர் டேனியல் ரிச்சர்டு தலைமையிலான 7 பேர் குழுவினர், புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்தனர். விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடமும் புயல் பாதிப்பு குறித்து அவர்கள் கேட்டறிந்தனர்.
3 நாட்கள் ஆய்வை நேற்று மாலை முடித்த டேனியல் ரிச்சர்டு தலைமையிலான மத்தியக் குழுவினர், இன்று பிற்பகலில், சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்திக்க உள்ளனர். புயல் பாதிப்புகள், அது தொடர்பாக அறிக்கை தயாரித்தல் உள்ளிட்டவை குறித்து முதலமைச்சருடன் மத்தியக் குழு ஆலோசிக்க உள்ளதாக கூறப்படுகிறது.