மும்பை தாக்குதலையோ அதை நடத்தியவர்களையோ இந்தியா ஒருபோதும் மறக்காது எனக் குறிப்பிட்டுள்ள பிரதமர், இந்த விவகாரத்தில் நீதி நிலைநாட்டப்படும் என தேசத்திற்கு உறுதியளித்துள்ளார்.
சட்டமன்ற தேர்தலை எதிர்கொண்டுள்ள ராஜஸ்தானின் பில்வாரா நகரில், பிரதமர் மோடி பிரச்சாரம் மேற்கொண்டார். தாம் எப்போதாவது விடுமுறை எடுத்ததாகவே பொழுதுபோக்க எங்காவது சென்றதாகவோ அல்லது திடீரென ஒரு வார காலம் மாயமாகிவிட்டதாகவோ நீங்கள் கேட்டதுண்டா என மோடி கேள்வி எழுப்பினார்.
பிரதமராக தாம் எடுத்த ஒவ்வொரு முடிவு பற்றியும் ஆற்றிய ஒவ்வொரு பணி குறித்தும் தெளிவாக விளக்க முடியும் எனவும் பிரதமர் குறிப்பிட்டார். மும்பை தாக்குதல் நடத்தப்பட்ட நாளில் உலகமே அதிர்ந்ததாகவும், ஆனால் அப்போது ஆட்சிப் பொறுப்பில் இருந்த காங்கிரஸோ தேசபக்தி குறித்து பாடம் நடத்திக் கொண்டிருந்ததாகவும் மோடி கூறினார். ஆனால் தேசமே பெருமிதம் அடைந்த சர்ஜிக்கல் தாக்குதல் குறித்து கேள்விகள் எழுப்பிய காங்கிரஸ் கட்சி, வீடியோ ஆதாரங்களை தருமாறு கேட்டதாகவும் பிரதமர் குற்றம்சாட்டினார். மும்பை தாக்குதலையோ அதை நடத்தியவர்களையோ இந்தியா ஒருபோதும் மறக்காது எனக் குறிப்பிட்ட மோடி, இந்த விவகாரத்தில் நீதி நிலைநாட்டப்படும் என தேசத்திற்கு உறுதியளிப்பதாகத் தெரிவித்தார்.