நாகை மாவட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்ட இடங்களில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆய்வு நடத்தி, மக்களைச் சந்தித்து குறைகளைக் கேட்டறிந்தார்.
கஜா புயலால் நாகை மாவட்டம் வேதாராண்யம், தரங்கம்பாடி உள்ளிட்ட இடங்களில் பலத்த சேதம் ஏற்பட்டது. சேதமடைந்த பகுதிகளில் சீரமைப்புப் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் நாகை மாவட்டம் தரங்கம்பாடியில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.
மீட்பு பணியில் ஈடுபட்டு வரும் அதிகாரிகள் மற்றும் பணியாளர்களிடம் பணிகள் குறித்து கேட்டறிந்த அவர், புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மீனவ மக்களையும் சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.
அப்போது அங்கு துறைமுகம் அமைக்க வேண்டும் என்றும், துறைமுகம் அமைக்கப்பட்டால் இயற்கை சீற்றங்கள் குறையும் என அப்பகுதி மக்கள் மு.க.ஸ்டாலினிடம் கூறினர். தொடர்ந்து மக்களுக்கு நிவாரண பொருட்களை மு.க.ஸ்டாலின் வழங்கினார்.