தஞ்சாவூர் பெருவுடையார் திருக்கோவிலில், வாழும் கலை அமைப்பு நடத்த இருந்த நிகழ்ச்சிக்கு, இடைக்கால தடை விதித்து, உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டிருக்கிறது.
கும்பகோணத்தைச் சேர்ந்த வெங்கட் என்பவர், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத் தாக்கல் செய்தார்.. அதில், “தஞ்சாவூர் பெருவுடையார் கோவிலில் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரின் வாழும் கலை அமைப்பு சார்பில் நடத்தப்படும், 2 நாள் நிகழ்ச்சிக்கு, கோவில் அருகே பெரிய பந்தல் போடப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
பழம்பெருமையும், பாரம்பரியமும் கொண்ட தஞ்சாவூர் பெருவுடையார் கோவிலில், தனியார் அமைப்புகளுக்கு நிகழ்ச்சி நடத்த அனுமதி அளிப்பது கோவிலின் சிறப்பை பாதுகாக்க தவறும் நடவடிக்கையாக உள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும், நிகழ்ச்சியை நடத்தும் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் 2017ஆம் ஆண்டு யமுனை நதிக்கரையில் மாசினை ஏற்படுத்தும் விதமாக நிகழ்ச்சி நடத்தியதற்காக பசுமை தீர்ப்பாயத்தால் 5 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டவர் என்றும் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எனவே, அவசர வழக்காக விசாரிப்பதோடு, வாழும் கலை அமைப்பின் நிகழ்ச்சிக்கு தடை விதிக்க வேண்டும் என மனுவில் கோரப்பட்டிருந்தது.
இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது வாழும் கலை அமைப்பின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், தியான நிகழ்ச்சியை மட்டும் நடத்தவே அனுமதி பெறப்பட்டுள்ளது என்றும், கோவில் பிரகாரத்தில் பந்தல்கள் முழுவதுமாக அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அதற்கு நீதிபதிகள் தியான நிகழ்ச்சி எனில் அதற்கு மண்டபங்களை அணுகியிருக்கலாமே? பாரம்பரிய கோவிலினுள் நடத்த காரணமென்ன? என கேள்வி எழுப்பினர்.