கஜா புயல் பாதித்த மாவட்டங்களில் பள்ளிகளில் மாணவர்களுக்கு தொற்றுநோய்த் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருவதாக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், புயல் பாதித்த மாவட்டங்களில் அனைத்து பள்ளிகளிலும் சுகாதாரத்துறை, உள்ளாட்சித்துறை, பள்ளிக்கல்வித் துறை மூலம் பள்ளி வளாகங்களை தூய்மையாக வைத்திருப்பது, கொசுக்கள் உற்பத்தியை தடுக்க புகை மருந்து அடிப்பது போன்ற பன்முக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
பள்ளி மாணவர்களுக்கு காய்ச்சல் உள்ளிட்ட தொற்றுநோய் அறிகுறிகளை கண்டறிய பரிசோதனைகள் செய்யப்பட்டு வருவதாக அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
புயல் பாதித்த மாவட்டங்களில் இதுவரை 9 லட்சத்து 64 ஆயிரத்து 255 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டிருப்பதாகவும், 47 லட்சத்து 95 ஆயிரத்து 922 பேருக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டிருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.