டீசல் விலை உயர்வைக் கண்டித்து ராமேஸ்வரம், புதுக்கோட்டை விசைப்படகு மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்

டீசல் விலை உயர்வைக் கண்டித்து புதுக்கோட்டை மற்றும் ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் டீசல் விலை உயர்வால் தங்களின் மீன்பிடித் தொழில் பாதிக்கப்படுவதாகக் கூறி புதுக்கோட்டை, ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் ஜெகதாப்பட்டினம் மற்றும் கோட்டைப்பட்டினத்தில் 600க்கும் அதிகமான விசைப்படகில் 6 ஆயிரத்திற்கும் அதிகமான மீனவர்கள் மீன்பிடிக்கும் தொழில் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் டீசல் விலை உயர்வினை கண்டித்தும், கூடுதல் மானிய விலையில் டீசல் வழங்கக்கோரியும், இலங்கையில் உள்ள தமிழக மீனவர்களின் விசைப்படகினை உடனே விடுவிக்ககோரியும் வலியுறுத்தி புதுக்கோட்டை மாவட்ட விசைப்படகு மீனவர்கள் இன்றுமுதல் வேலை நிறுத்தம் செய்வதாக அறிவிப்பு செய்துள்ளனர். இந்த அறிவிப்பின் காரணமாக விசைப்படகு அனைத்தும் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் ராமேஸ்வரத்தில் விசைப்படகு மீனவர்கள் சங்கக் கூட்டம் அதன் தலைவர் சேசுராஜ் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில்,  டீசல் உயர்வை திரும்ப பெற வலியுறுத்தியும், மானிய விலை டீசலை கூடுதலாக வழங்ககோரியும் ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்ததில் ஈடுபடுதாகவும் முடிவு செய்யப்பட்டது. தொடர்ந்து வரும் 8ம் தேதி ராமநாதபுர மாவட்ட மீனவர்கள் சார்பில் ராமநாதபுரத்தில் உண்ணாவிரத போராட்டம் நடத்தவும் தீர்மானிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *