சென்னை மெட்ரோ ரயில் விரிவாக்கம் திட்டத்துக்கு முதற்கட்டமாக, 4 ஆயிரத்து 770 கோடி ரூபாயை கடனாக வழங்க, ஜப்பான் நிறுவனம் முன்வந்துள்ளது.
சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், மெட்ரோ ரயில் திட்டம் கொண்டு வரப்பட்டது. விரைவில் 2வது கட்ட மெட்ரோ பணிகள் நடைபெறவுள்ளன. மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரை ஒரு வழித்தடத்திலும், மாதவரத்தில் இருந்து கோயம்பேடு பேருந்து நிலையம் வரை மற்றொரு வழித்தடத்திலும் சுமார் 52 கிலோ மீட்டர் தூரத்துக்கு 2வது கட்ட மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
இந்த திட்டத்துக்கு 40 ஆயிரத்து, 941 கோடி ரூபாய் செலவாகும் என திட்டமிடப்பட்டுள்ள நிலையில், 20 ஆயிரத்து 196 கோடி ரூபாயை கடனாக வழங்க ஜப்பான் இன்டர்நேஷனல் கார்ப்பரேஷன் நிறுவனம் முன்வந்துள்ளது.
இதில் முதற்கட்டமாக, 4 ஆயிரத்து 770 கோடி ரூபாயை கடனாக வழங்க, மத்திய அரசின் பொருளாதார விவகாரங்கள் துறை கூடுதல் செயலருக்கும், ஜப்பான் நிறுவனத்துக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.