சபரிமலை விவகாரத்தில் கேரள அரசின் நடவடிக்கை வரலாற்றில் மிக மோசமானது என்றும், ஆன்மிக உணர்வுகளை மதிக்கவில்லை எனவும் பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார்.
கேரள மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, கொல்லத்தில் நடைபெற்ற பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது, கடந்த 4 ஆண்டுகளில் பொருளாதார ரீதியாக பின்தங்கிய நாடாக இருந்த இந்தியா, வளர்ந்த நாடுகள் பட்டியலில் இணைந்துள்ளதாக குறிப்பிட்டார். பின்தங்கிய பகுதிகளுக்கு போக்குவரத்து உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக மோடி தெரிவித்தார். சபரிமலை விவகாரத்தில் கேரள அரசின் நடவடிக்கையை அவர் கடுமையாக சாடினார்.
ஆன்மிகம், மத நம்பிக்கைகளை ஒருபோதும் இடதுசாரி அரசு மதித்ததில்லை என்றும், கேரள அரசின் போக்கு, வரலாற்றில் மோசமாக இடம்பெறும் எனவும் மோடி தெரிவித்தார். கம்யூனிஸ்ட் கட்சிகளும், காங்கிரசும் பெயரளவில்தான் வேறு வேறு என்றும், இளைஞர்களின் சக்தியை வீணடிப்பதில் இரண்டும் ஒன்றுதான் என்று அவர் குற்றம் சாட்டினார்.