12 கி.மீட்டர் வேகத்தில் நகர்ந்து வரும் கஜா புயல் , பாம்பனுக்கும், கடலூருக்கும் இடையே நாளை மாலை கரையை கடக்க உள்ளது. புயலோடு மிக கனமழையும் வரும் என்பதால் 7 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் உருவாகியுள்ள கஜா புயல், மாலை 5 மணி நிலவரப்படி சென்னையில் இருந்து 470 கிலோ மீட்டர் தூரத்திலும், நாகையில் இருந்து 550 கிலோ மீட்டர் தூரத்திலும் உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மேலும் காலையில் மணிக்கு 7 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வந்த கஜா புயல், இப்போது மணிக்கு 12 கிலோ மீட்டர் வேகத்தில் கரையை நோக்கி நகர்வதாகவும், வருகிற 15 ஆம் தேதி மாலை பாம்பனுக்கும் கடலூருக்கும் இடையே கரை கடக்கும் என்றும், புயல் கரையைக் கடக்கும் போது 100 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புயல் காரணமாக, தமிழகம், புதுச்சேரியில் அனேக இடங்களில் புதன்கிழமை மாலை முதல் மழை பெய்யும் என்றும், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல ஊர்களில் வியாழக்கிழமை அன்று மிக கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இதில் கடலூர், நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் சுமார் 20 சென்டிமீட்டர் வரை மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. நாகை, தஞ்சை, புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் மற்றும் புதுச்சேரியின் காரைக்கால் மாவட்டங்களில் கடலோரத்தின் தாழ்வான பகுதிகளில் கடல் நீர் புக வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.