சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வரும் நிலையில், இந்தியா மற்றும் பன்னாட்டு எண்ணெய் நிறுவனங்களின் தலைமை நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.
சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வாலும், ரூபாய் மதிப்பு வீழ்ச்சியாலும் உள்நாட்டில் பெட்ரோல், டீசல் விலைகள் தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகின்றன. மத்திய அரசு கலால் வரியையும், பாஜக ஆளும் மாநிலங்கள் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியையும் ஓரளவுக்கு குறைத்தபோதும், விலை உயர்வு தொடர்கதையாகி வருகிறது.
மேலும், இந்தியா ஈரானில் இருந்து கணிசமான அளவு எண்ணெய் இறக்குமதி செய்யும் நிலையில், அந்நாட்டிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது நவம்பர் 4ஆம் தேதி முதல் பொருளாதாரத் தடை விதிக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், இந்தியா மற்றும் பன்னாட்டு எண்ணெய் நிறுவனங்களின் தலைமை நிர்வாகிகள் பிரதமர் மோடியை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
எண்ணெய், எரிவாயு வளங்களை கண்டுபிடிப்பது மற்றும் உற்பத்தி செய்வது தொடர்பான முதலீடுகளை பெருக்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது. மத்திய நிதியமைச்சர் அருண்ஜேட்லி, பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், நிதி ஆயோக் துணைத்தலைவர் ராஜீவ் குமார் உள்ளிட்டோரும் இந்த ஆலோசனையில் பங்கேற்றனர்.
தொழில்-வணிகம் செய்வதை எளிதாக்குவதற்கு, குறிப்பாக எரிசக்தித்துறையில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து அப்போது எடுத்துரைக்கப்பட்டுள்ளது. கச்சா எண்ணெய் விலை உயர்வால், நுகர்வு நாடுகள் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்து பிரதமர் மோடி சுட்டிக்காட்டியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.