தமிழகத்தில், ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய சிறப்பாசிரியர் தேர்வில் குளறுபடிகள் நடந்திருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
தமிழகத்தில் தையல், ஓவியம், உடற்கல்வி, இசை ஆகிய ஆயிரத்து 325 சிறப்பாசிரியர் காலிப் பணியிடங்களுக்கான தேர்வை கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தியது. பின்னர், கடந்த ஆகஸ்ட் 16-ஆம் தேதி சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு, தேர்வானவர்களின் இறுதிப்பட்டியல் கடந்த வெள்ளியன்று வெளியிடப்பட்டது. இதில், தகுதியுள்ள பலரது பெயர்கள் விடுபட்டிருப்பதோடு, தகுதியற்ற, குறைவான மதிப்பெண் பெற்றுள்ள பலரது பெயர்கள் இடம்பெற்றிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
உடற்கல்வி பிரிவில் தேர்வெழுதியவர்களில் குறிப்பிட்ட சில பாடங்களை படித்தவர்கள் ( C.P.Ed, D.P. ed) நிராகரிக்கப்படுவதாகவும், இதுகுறித்து அறிவிக்கையில் குறிப்பிடவில்லை என்றும் பாதிக்கப் பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.