ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்தில் அப்போலோ மருத்துவமனை நிர்வாக அதிகாரி சுப்பையா விசுவநாதன் ஆஜராகிப் பிரமாணப் பத்திரம் செய்தார்.
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையம் அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது பதிவான சிசிடிவி காட்சிகளை செப்டம்பர் 7ஆம் நாளுக்குள் வழங்குமாறு உத்தரவிட்டது. குறித்த நாளில் சிசிடிவி காட்சிகளை வழங்காததால் அப்போலோ மருத்துவமனை நிர்வாக அதிகாரி சுப்பையா விஸ்வநாதன் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிட்டது.
இதையடுத்து செப்டம்பர் 11இல் ஆஜரான சுப்பையா விஸ்வநாதன் 45நாட்கள் பதிவான காட்சிகளே இருக்கும் என்றும், அதற்கு முந்தைய நாட்களில் பதிவான காட்சிகள் தானாகவே அழிந்துவிடும் என்றும் விளக்கம் அளித்தார். இதையடுத்து விளக்கத்தைப் பிரமாணப் பத்திரமாகத் தாக்கல் செய்யுமாறு ஆறுமுகசாமி தெரிவித்தார். இந்நிலையில் அப்போலோ மருத்துவமனை நிர்வாக அதிகாரி சுப்பையா விஸ்வநாதன் இன்று ஆஜராகித் தனது விளக்கத்தைப் பிரமாணப் பத்திரமாகத் தாக்கல் செய்தார்.
இதேபோல் தமிழக முன்னாள் ஆளுநர் வித்யாசாகர் ராவின் தனிச்செயலராக இருந்த ரமேஷ்சந்த் மீனாவும் இன்று ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தார். அவரிடம் ஜெயலலிதா உடல்நலம் குறித்து மருத்துவமனையில் இருந்து ஆளுநருக்கு அறிக்கை அனுப்பப்பட்டதா? ஆளுநர் மாளிகையில் இருந்து மத்திய உள்துறை அமைச்சகத்துக்கும், குடியரசுத் தலைவருக்கும் அறிக்கை அனுப்பப்பட்டதா? என்பது குறித்து விசாரணை நடைபெற்றது.