காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகே ஓடும் பேருந்தில் ஒரு லட்சம் ரூபாய் திருடிய நான்கு பெண்களை போலீசார் கைது செய்தனர்.
கொலம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் சுபா. இவர் மதுராந்தகத்தில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் நகைகளை அடகு வைத்து விட்டு ஒரு லட்சம் ரூபாய் பணத்துடன் பேருந்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது கைப்பையில் வைத்திருந்த பணம் திடீரென மாயமாகியுள்ளது.
இதனால் அதிர்ச்சி அடைந்த சுபா மதுராந்தகம் காவல் நிலையத்தில் தமக்கு அருகில் இருந்த பெண்கள் பணத்தை திருடியதாக புகார் அளித்தார். அதன் பேரில் சுபாவுடன் சென்ற போலீசார் பஜார் தெருவில் நடந்து சென்ற நான்கு பெண்களை மடக்கி விசாரணை நடத்தியதில் பணத்தை திருடியது தெரியவந்தது. இதையடுத்து மதுரையை சேர்ந்த நான்கு பெண்களும் கைது செய்யப்பட்டனர்.