ஹுவேய் தலைமை நிதி அதிகாரி மெங்க் வான்சூவைக் கனடாவின் வான்கூவர் நீதிமன்றம் கடும் நிபந்தனைகளுக்கு உட்பட்டுப் பிணையில் விடுவித்துள்ளது.
சீனாவைச் சேர்ந்த ஹுவேய் டெக்னாலஜீஸ் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி மெங்க் வான்சூ கனடா காவல்துறையினரால் டிசம்பர் முதல் நாள் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் தன்னைப் பிணையில் விடுவிக்கக் கோரி வான்கூவர் நீதிமன்றத்தில் மெங்க் வான்சூ சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் பிணையில் விடுவித்தால் விசாரணைக்கு ஆஜராவதற்காக வான்கூவரிலேயே தங்கியிருப்பதாக உறுதியளிக்கப்பட்டது.
இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி வில்லியம் எர்க் 54கோடி ரூபாயைப் பிணையாகப் பெற்றுக்கொண்டு மெங்க் வான்சூவை விடுவிக்க உத்தரவிட்டார். கணுக்காலில் கண்காணிப்புக் கருவியை அணிந்திருக்க வேண்டும் என்றும், இரவு 11மணியில் இருந்து காலை 6மணி வரை வீட்டில் தங்கியிருக்க வேண்டும் என்றும், அவர் வெளிநாட்டுக்குத் தப்பிச் செல்ல மாட்டார் என 5நண்பர்கள் உறுதியளிக்க வேண்டும் என்றும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.