சட்டமேதை அண்ணல் அம்பேத்கரின் பெயரோடு, ராம்ஜி என்ற அவரது தந்தையின் பெயரையும் சேர்த்தே பயன்படுத்த வேண்டும் என முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்திரப்பிரதேச உத்தரவிட்டிருக்கிறது.
உத்திரப்பிரதேச ஆளுநர் ராம் நாயக்கின் பரிந்துரையை ஏற்று, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. இந்திய அரசியல் சாசனத்தை உருவாக்கிய அம்பேத்கர், சட்டப் புத்தகத்தில், பீமாராவ் ராம்ஜி அம்பேத்கர் என கையெழுத்திட்டுள்ளதை உத்திரப்பிரதேச அரசு சுட்டிக்காட்டியிருக்கிறது. மேலும், அம்பேத்கர் பிறந்த மகாராஷ்டிரா மாநில வழக்கப்படி, தங்கள் பெயரின் நடுவில் தந்தை பெயரை சேர்ப்பது வழக்கமான ஒன்று தான் என்றும் தெரிவித்திருக்கிறது. இவற்றின் அடிப்படையில், ஆவணங்கள் மற்றும் குறிப்புகளில், பீமாராவ் அம்பேத்கர் என்பதற்கு பதிலாக, அவரது தந்தையின் பெயரான ராம்ஜி என்பதை நடுவில் சேர்த்து, பீமாராவ் ராம்ஜி அம்பேத்கர் என்றே குறிப்பிட வேண்டும் என, அனைத்து துறைகளுக்கும், நீதிமன்றங்களுக்கு, உத்திரப்பிரதேச அரசு சுற்றறிக்கை அனுப்பியிருக்கிறது.