தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே அரசு பள்ளி கழிப்பறையை சுழற்சி முறையில் சுத்தம் செய்ய மாணவர்களை ஆசிரியர்கள் வற்புறுத்துவதாக பெற்றோர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள வசவப்புரம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி செயல்பட்டு வருகின்றது. இங்கு சுமார் 40 மாணவர்கள் பயின்று வரும் நிலையில், பள்ளியில் சுகாதார பணிகளை மேற்கொள்ள பணியாளர்கள் இல்லை எனக் கூறப்படுகிறது. இதனால் பள்ளியில் உள்ள கழிப்பறைகளை, தினமும் காலையில் சுழற்சி முறையில் பள்ளியில் படிக்கும் மாணவர்களேயே ஆசிரியர்கள் சுத்தம் செய்ய வைப்பதாகப் புகார் எழுந்தது. இதுகுறித்து பெற்றோர்கள் அப்பள்ளி ஆசிரியர்களிடம் கேட்டபோது, இனி இவ்வாறு நடக்காது எனக் கூறியுள்ளனர். இந்நிலையில் கழிப்பறையை மாணவர்கள் சுத்தம் செய்யும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியானது.
பெற்றோரின் எச்சரிக்கையையும் மீறி மாணவர்களை, ஆசிரியர்கள் கழிப்பறைகளை சுத்தம் செய்ய வைத்ததாகவும், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.