விழுப்புரம் அருகே 4 வயது குழந்தையை நீரில் மூழ்கடித்து கொன்றுவிட்டு தலைமறைவான பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர். கட்டமுத்து புதுப்பாளையத்தைச் சேர்ந்த சிலம்பரசன் – ஜெயசித்ரா தம்பதிக்கு 2 ஆண் குழந்தைகள் இருந்தனர்.
இவர்களில் 7 மாத குழந்தையான லக்சன், தண்ணீர் அண்டாவில் விழுந்து உயிரிழந்தது. அப்போது 3 நாள்கள் காணாமல் போய் திரும்பிய ஜெயசித்ரா, மனம் பொறுக்காமல் வெளியூர் சென்றிருந்ததாக போலீசில் கூறியுள்ளார்.
இதையடுத்து, இந்த தம்பதி எல்கேஜி பயிலும் 4 வயது மிதுனுடன் பனங்குப்பத்துக்கு குடிபெயர்ந்துள்ளது. வியாழனன்று காலை சிலம்பரசன் வழக்கம்போல வேலைக்குச் சென்றிருந்தபோது, மிதுன் பள்ளிக்கு வரவில்லை என பள்ளியிலிருந்து தகவல் வந்துள்ளது. இதையடுத்து, சிலம்பரசன் கூறிய தகவலின்படி அவரது பெற்றோர் பனங்குப்பம் வீட்டுக்கு சென்றபோது, ஜெயசித்ரா மாயமான நிலையில் தண்ணீர் தொட்டியில் மிதுனின் உடல் மீட்கப்பட்டுள்ளது. லக்ஷன், மிதுன் என அடுத்தடுத்து 2 குழந்தைகளையும் ஜெயசித்ராவே கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் வளவனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.