அமெரிக்க நாடாளுமன்ற இடைக்காலத் தேர்தலை முன்னிட்டு, அதிபர் டிரம்ப், இனவெறி பிரச்சாரங்களை ட்விட்டரில் மேற்கொண்டு வருவது, பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க இடைக்காலத் தேர்தல் வரும் 6ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதை முன்னிட்டு, அதிபர் டிரம்பின் குடியரசு கட்சியும், ஜனநாயக கட்சியும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன.
இந்நிலையில், அதிபர் டிரம்ப், தனது ட்விட்டர் பக்கத்தில், மெக்சிகோ உள்ளிட்ட நாடுகளில் இருந்து உரிய அனுமதியின்றி குடியேறியவர்களை கடுமையாக விமர்சிக்கும் வகையிலான வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
சட்டவிரோதமாக நாட்டுக்குள் நுழைந்தவர்கள், போலிசாரை கொன்றதாக குற்றஞ்சாட்டிய அவர், அமெரிக்கர்களுக்கு வேலை கிடைக்காததற்கு சட்டவிரோதமாக குடியேறியவர்களே காரணம் எனக்கூறி பல்வேறு வீடியோக்களை வெளியிட்டு, வருகிறார். இவை அமெரிக்கர்களுக்கே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.