பச்சிளம் குழந்தையை குளத்தில் மூழ்கடித்துக் கொன்ற கொடூர தந்தை

நெல்லை மாவட்டம் ஆலங்குளத்தில் பிறந்து 22 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையை குளத்தில் மூழ்கடித்துக் கொன்ற கொடூர தந்தையை போலீசார் கைது செய்தனர்.

ஆலங்குளம் அய்யனார் குளத்தைச் சேர்ந்த இசக்கிமுத்து – ஆனந்தி தம்பதிக்கு 22 நாட்களுக்கு முன்னர் ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தை பெற்ற ஆனந்தி, சீதபற்பநல்லூரில் உள்ள தனது தாய் வீட்டில் இருந்துள்ளார். அப்போது மனைவியையும், குழந்தையையும் அனுப்பி வைக்குமாறு இசக்கிமுத்து கேட்டுள்ளார்.

சிறிது நாட்கள் கழித்து அனுப்பி வைப்பதாக ஆனந்தியின் வீட்டார் கூறிவிடவே, பின்னர் மதுபோதையில் சென்று இசக்கிமுத்து நேற்றிரவு தகராறு செய்துள்ளார். இரவு அவர் அங்கேயே தங்கிய நிலையில், காலையில் கணவரும், குழந்தையும் மாயமானதால் அதிர்ச்சி அடைந்த ஆனந்தி காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

அப்போது ஒன்றும் தெரியாதது போல் வந்த இசக்கிமுத்துவிடம் போலீசார் விசாரணை நடத்திய போது, குழந்தையை குளத்தில் மூழ்கடித்துக் கொலை செய்ததை அவன் ஒப்புக் கொண்டதாகக் கூறப்படுகிறது. கிராம மக்கள் உதவியுடன் பல மணி நேரத்திற்குப் பின் குழந்தையின் சடலம் மீட்கப்பட்டது.

இதை அடுத்து இசக்கிமுத்துவை போலீசார் கைது செய்தனர். ஆனந்தியின் முதல் பெண் குழந்தையும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் தொட்டிலில் தூங்கும் போது மர்மமான முறையில் இறந்ததற்கும் இசக்கி முத்துவே காரணமாக இருக்கக் கூடும் என்ற சந்தேகத்தில் அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *