திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் 2 நகைக்கடைகள் உள்பட 9 இடங்களில் 2வது நாளாக நடைபெற்று வரும் வருமான வரிச் சோதனையில், பல கோடி ரூபாய் வரி ஏய்ப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
போளூர் சிந்தாதிரிப்பேட்டை பகுதியில் ஜெயின் ஜூவல்லரி, லஷ்மி ஜூவல்லரி ஆகிய கடைகளில் நேற்று மாலையில் சோதனையைத் தொடங்கிய வருமான வரித்துறை அதிகாரிகள், நகைக்கடை உரிமையாளர்களுக்கு சொந்தமான வீடுகள், ஜவுளிக்கடைகள், பெட்ரோல் பங்க் உள்பட 9 இடங்களில் சோதனையை தொடர்ந்தனர்.
இதனால், பணியாளர்கள் யாரையும் வீட்டுக்கு அனுப்பாமல் விடிய விடிய சோதனை நடத்திய அதிகாரிகள், பல கோடி ரூபாய் வரி ஏய்ப்பை கண்டுபிடித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், கணக்கில் வராத பணம் மற்றும் நகைகள் சிக்கியுள்ளதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
இதையடுத்து, இன்று 2வது நாளாக சோதனையை தொடர்ந்து வரும் வருமான வரித்துறை அதிகாரிகள், இதுவரை கைப்பற்றப்பட்ட ஆவணங்களை மதிப்பிடும் பணியில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.