மத்திய அரசிடமிருந்து தமிழகத்திற்கு வரவேண்டிய 8 ஆயிரத்து 500 கோடி ரூபாயை விரைவில் வழங்க ஜிஎஸ்டி கூட்டத்தில் வலியுறுத்தப் போவதாக தமிழக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் இன்று நடைபெறக்கூடிய 31 வது ஜி.எஸ்.டி கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி புறப்படு சென்றார். முன்னதாக விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 5 ஆயிரத்து 454 கோடி ரூபாய் ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி பாக்கி மற்றும் ஈட்டுதொகை சுமார் 3 ஆயிரம் கோடி ரூபாய் என தமிழத்திற்கு வர வேண்டிய சுமார் 8 ஆயிரத்து 454 கோடி ரூபாயை விரைவில் வழங்க வலியுறுத்தப்படும் என்றார்.
ஏற்கனவே பல பொருட்களின் ஜி எஸ்.டி வரியை குறைக்க சொல்லி தமிழகம் சார்பில் வலியுறுத்தியதாகக் கூறிய அவர், 11 பொருட்களுக்கு சேவை வரியும் 75 பொருட்களுக்கு வரி விலக்கு மற்றும் வரி குறைக்க வலியுறுத்த உள்ளதாகவும் குறிப்பிட்டார். ஜி.எஸ்.டி வரியை குறைக்க கோரி தமிழகம் தொடர்ந்து வலியுறுத்த வருகிறது என்று தெரிவித்த அமைச்சர் ஜெயக்குமார், இதனால் பல பொருட்களின் வரி குறைய இருப்பதாக தெரிவித்தார்.