திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டில் காதல் ஜோடி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டு புதுநகரில் தேநீர்க் கடை வைத்துள்ள ஆதி என்பவரின் மகன் ஆகாசும், அதே ஊரைச் சேர்ந்த மின்வாரிய ஊழியர் சம்பத்குமாரின் மகள் ரம்யாவும் காதலித்து வந்தனர். ரம்யா பொறியியல் கல்லூரியில் படித்து வந்தார்.
இந்நிலையில் இருவரும் அத்திப்பட்டு ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் ரயில்முன்பு பாய்ந்து தற்கொலை செய்துகொண்டனர். தகவல் அறிந்த மீஞ்சூர் காவல்துறையினரும் கொருக்குப்பேட்டை ரயில்வே காவல்துறையினரும் இருவரின் உடல்களையும் மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பால் இருவரும் தற்கொலை செய்துகொண்டனரா என்பது குறித்துக் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.