புயல் நிவாரண பணிகளுக்காக மத்திய அரசு முதல்கட்ட நிதியாக 200 கோடி வழங்கியது: தங்கமணி

புயல் நிவாரண பணிகளுக்காக மத்திய அரசு முதற்கட்டமாக தமிழக மின் வாரியத்திற்கு 200 கோடி ரூபாய் வழங்கியுள்ளதாக அத்துறையின் அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

கஜா புயலால் சேதமடைந்த மின் கம்பங்களை சீரமைப்பு செய்தபோது, மின்சாரம் தாக்கி உயிரிழந்த நாமக்கல் மாவட்டம் மானுவக்காட்டுப்பாளையத்தைச் சேர்ந்த முருகேசனின் குடும்பத்திற்கு, தமிழக அரசு 13 லட்சம் ரூபாயும், மின் வாரியம் சார்பில் 2 லட்சம் ரூபாயும் என 15 லட்சம் ரூபாயும் நிவாரணமாக அறிவிக்கப்பட்டது. இதில் மின்வாரியம் சார்பில் அறிவித்த 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான காசோலையை மானுவக்காட்டு பாளையத்துக்கு நேரில் சென்று, மின்துறை அமைச்சர் தங்கமணி இன்று நேரில் வழங்கி, ஆறுதல் கூறினார்.

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தங்கமணி, தமிழக அரசு அறிவித்த 13 லட்சம் ரூபாய்க்கான காசோலை 2 நாட்களில் வழங்கப்படும் என தெரிவித்தார். எதிர்பார்த்ததை விட அதிக மின் கம்பங்கள் சேதமானதால் ஆந்திராவில் இருந்து மின் கம்பங்கள் வரவழைக்கப்பட்டுள்ளதாகவும், புயல் பாதிப்பால் சேதமடைந்த ஊரக பகுதிகளில் இன்னும் ஒரு வார காலத்திற்குள் முழுமையாக மின்சாரம் வழங்கப்படும் எனவும் அவர் கூறினார். புயல் நிவாரண பணிகளுக்காக மத்திய அரசு முதற்கட்டமாக மின் வாரியத்திற்கு 200 கோடி ரூபாய் வழங்கி உள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *