திருவாரூர் மாவட்டம் முழுவதும் இன்னும் 3 நாட்களுக்குள் சகஜ நிலை திரும்பிவிடும் என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் அரசு மற்றும் சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி சார்பில், கஜா புயல் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. திருத்துறைப்பூண்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கஜா புயல் நிவாரண முகாமில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவ முகாமில், 25 மருத்துவர்களும், 50க்கும் மேற்பட்ட மருத்துவ உதவியாளர்களும் பங்கேற்றுள்ளனர்.
இந்த மருத்துவ முகாமை அமைச்சர்கள் செல்லூர் ராஜு, காமராஜ் ஆகியோர் தொடங்கி வைத்தனர். முகாமில் ஏராளாமான பொதுமக்கள் பங்கேற்று, சிகிச்சை பெற்றனர். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் காமராஜ், கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களை சென்னைக்கு கொண்டு சென்று மேல் சிகிச்சை அளிக்க, ராமச்சந்திரா மருத்துவமனை முன்வந்திருப்பதாக தெரிவித்தார். மேலும், திருவாரூர் மாவட்டத்தில் முழு வீச்சில் நிவாரணம் மற்றும் மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதாக கூறிய அவர், இன்னும் இரண்டு மூன்று நாட்களில் சகஜ நிலை திரும்பிவிடும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, திருவாரூரில் வேளாண்மை விற்பனைக் கூட கிடங்கில் வைக்கப்பட்டுள்ள 10 கோடி ரூபாய் மதிப்பிலான நிவாரணப் பொருட்களை அமைச்சர்கள் செல்லூர் ராஜு, காமராஜ் மற்றும் கே.சி.வீரமணி ஆகியோர் பார்வையிட்டனர். பல்வேறு மாவட்டங்களில் இருந்து அனுப்பி வைக்கப்பட்ட நிவாரணப் பொருட்களை பார்வையிட்ட அவர்கள், நுகர்பொருள் வாணிபக் கழகம் சார்பில், 20 பொருட்கள் அடங்கிய பைகள் கஜா புயலால் பாதிக்கப்பட்ட 3 ஆயிரம் பேருக்கு வழங்கப்பட இருப்பதாகவும் தெரிவித்தனர்.