நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தப் பணி விவகாரத்தில் வழக்கை சந்திக்க தயார் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். அரசுக்கு எதிராக தி.மு.க. திட்டமிட்டு பொய்ப்பிரச்சாரம் செய்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அ.தி.மு.க.வின் 47-வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் நடைபெற்றது. கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கட்சிக் கொடியை ஏற்றி நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். இக்கூட்டத்தில் பேசிய அவர்,
தமிழகத்தை 28 ஆண்டு காலம் ஆட்சி செய்த அ.தி.மு.க. அரசு ஏராளமான நலத்திட்டங்களை செயல்படுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டார். நெடுஞ்சாலை ஒப்பந்த வழக்கு உள்ளிட்ட எந்த வழக்கையும் சந்திக்கத் தயார் என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
இந்த கட்சியை மிரட்டி பார்க்கின்றனர். எங்களுக்கு மடியில் கனம் இல்லை. வழியில் பயம் இல்லை. உங்களுக்கு தான் பயம் உள்ளது. புதிய தலைமை செயலக கட்டிடம் கட்டிய விவகாரத்தில் ஊழல் நடந்தது தொடர்பாக விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டபோது நீங்கள் நீதிமன்றம் சென்றீர்கள். ஆனால் என் மீது நீங்கள் புகார் கொடுத்தீர்கள். நாங்கள் நீதிமன்றம் செல்லவில்லை.
நெடுஞ்சாலை ஒப்பந்த வழக்கில் நீதிமன்றம், அவர் அதிகாரத்தில் இருக்கிறார், எனவே விசாரணை சரியாக நடக்க வேண்டும் என்று தீர்ப்பு அளித்துள்ளது. குற்றவாளி என்று கூறவில்லை. மடியில் கனமில்லாததால் எந்த வழக்குகளையும் சந்திக்க தயார்.
தி.மு.க.வில் வாரிசு அரசியல் இருப்பதாகவும், அ.தி.மு.க.வில் சாதாரணத் தொண்டனுக்கும் பதவிகள் வழங்கப்பட்டதாகவும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
தி.மு.க.வில் கருணாநிதி, அவருக்கு பின்னர் மு.க.ஸ்டாலின், தற்போது உதயநிதி வந்துள்ளார். இது வாரிசு அரசியல். எனவே தி.மு.க. ஒரு கட்சி அல்ல, கம்பெனியாக்கிவிட்டார்கள். ஆனால் அ.தி.மு.க. அப்படி இல்லை. அண்ணா இருந்த போது, சாதாரண தொண்டன் கூட எம்.பி., எம்.எல்.ஏ. ஆனார்கள்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, அரசுக்கு எதிராக திமுக திட்டமிட்டு பரப்பும் பொய் பிரசாரங்களை முறைப்படி எதிர்கொள்ள அதிமுக நடவடிக்கை எடுக்கும் என்று தெரிவித்தார்.