பாலியல் புகார்கள் எதிரொலி மத்திய அரசு அதிரடி நடவடிக்கை -ராஜ்நாத்சிங் தலைமையில் மத்திய அமைச்சரவைக் குழு நியமனம்

மத்திய இணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமாவைத் தொடர்ந்து பாலியல் புகார்கள் குறித்து விசாரிக்கவும் புதிய சட்டம் இயற்றுவது குறித்து பரிசீலிக்கவும் மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

பணியிடங்களில் பாலியல் தொல்லையை விசாரிக்க, உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி பணியிடங்களில் விசாகா கமிட்டி அமைக்க வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டது. இருப்பினும் பணியிடங்கள் தவிர்த்து பொதுவெளியிலும் பெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல்களை விவரிக்கத் தொடங்கியுள்ளனர். வெளியுறவுத்துறை இணையமைச்சர் எம்.ஜே.அக்பர் மீது பல்வேறு பாலியல் புகார்கள் குவியத் தொடங்கியதையடுத்து, நேற்று அவர் தமது பதவியை ராஜினாமா செய்தார். தம் மீதான குற்றச்சாட்டுகளை சட்டரீதியாக சந்திக்கப் போவதாக எம்.ஜே.அக்பர் தெரிவித்தார்.

இந்நிலையில், உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தலைமையில் மூன்று அமைச்சர்கள் கொண்ட குழுவை மத்திய அரசு நியமித்துள்ளது. மத்திய அமைச்சர்கள் மேனகா காந்தி, நிர்மலா சீதாராமன் ஆகியோர் இதில் இடம்பெற்றுள்ளனர். இக்குழு பாலியல் புகார்கள் குறித்த விசாரணையை கண்காணித்து 3 மாதங்களில் அறிக்கை அளிக்கும். பாலியல் வன்கொடுமை தொடர்பான சட்டத்திருத்தங்களையும் இக்குழு பரிந்துரை செய்யும்.

பாலியல் புகார்கள் காரணமாக நீதித்துறைக்கு கூடுதல் சுமை ஏற்படுவதைத் தவிர்க்க, தற்போதுள்ள சட்டத்தின்படி நீதிமன்றங்களை நாடாமலே இருதரப்பினரிடையே தீர்வு காணவும் இந்த குழு முயற்சி செய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பாலியல் புகார்களை 3 மாத காலத்திற்குள் தெரிவிக்க வேண்டும் என்ற 2013ம் ஆண்டு சட்டத்தை திருத்துவது அவசியமா என்பது குறித்தும் இந்த குழு பரிசீலிக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *