அக்டோபர் 20 ஆம் தேதி நாடு முழுவதும் வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பான சூழல் நிலவுவதாக இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.
இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நாட்டின் தெற்குப் பகுதியில், அடுத்த ஓரிரு நாட்களுக்கு மழை தொடரும் என தெரிவித்துள்ளது. ஆந்திராவின் வடக்கு கடலோரம், தெலுங்கானா, கர்நாடகா, தமிழகத்தின் உள் மாவட்டங்களில் கனமழை பெய்துள்ளதாகவும். அக்டோபர் 20 ஆம் தேதி நாட்டில் தென்மேற்கு பருவமழை முடிவுக்கு வந்து, வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்புள்ளதாகவும், இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதனிடையே, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வெப்பச்சலனம், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கேரளா, அதனை ஒட்டியுள்ள பகுதிகள், தென் தமிழகம் மற்றும் உள் மாவட்டங்களில் மழை அல்லது கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்தை பொறுத்தவரை தமிழகம், புதுச்சேரியில் அநேக இடங்களில் மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் சில பகுதிகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்வதற்கு வாய்ப்பு உள்ளதாகவும் அந்த மையம் கூறியுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தை பொறுத்தவரை மேட்டுப்பாளையத்தில் 8 சென்டி மீட்டர் மழையும் ஜெயங்கொண்டத்தில் 7சென்டி மீட்டர் மழையும் அறந்தாங்கி, தொண்டி, நாகர்கோவில், சின்ன கல்லாறு, ஆகிய இடங்களில் தலா 5 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. சென்னையில், போரூர், கிண்டி, நந்தம்பாக்கம், ஈக்காட்டுத்தாங்கல், ஜாஃபர்கான்பேட்டை, அசோக் பில்லர், வடபழனி, கத்திபாரா உள்ளிட்ட இடங்களில் பகலில் சுமார் அரை மணி நேரத்துக்கும் மேலாகமழை பெய்தது.