தமிழகத்தில், 3 ஆயிரம் ஊர்களின் ஆங்கிலப் பெயர்களை, தமிழில் மாற்றுவதற்கான அரசாணை இன்னும் ஓரிரு நாட்களில் பிறப்பிக்கப்படும் என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
மகாகவி பாரதியாரின் 136வது பிறந்தநாள் வரும் 11ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு, வானவில் பண்பாட்டு மையத்துடன் இணைந்து, தேச பக்தி விழா என்ற நிகழ்ச்சியை தமிழ் வளர்ச்சித்துறை நடத்தி வருகிறது.
சென்னை கலைவாணர் அரங்கில் 4 நாட்கள் நடைபெறவுள்ள நிகழ்ச்சியின் தொடக்க விழாவில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், அமைச்சர் கடம்பூர் ராஜு மற்றும் மாஃபா பாண்டியராஜன் ஆகியோர் பங்கேற்றனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பாண்டியராஜன், அரசு ஆவணங்களில் ஆங்கிலத்தில் குறிப்பிடப்படும் பெயர்களை தமிழில் மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாகவும், இன்னும் ஓரிரு நாட்களில் அதற்கான அரசாணை பிறப்பிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.