ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் பூக்களின் விலை உயர்ந்து காணப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். சத்தியமங்கலம் மார்க்கெட்டில் ஒரு கிலோ மல்லிகைப்பூ 1,200, முல்லைப்பூ ரூ.450க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சத்தியமங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பவானிசாகர், கொத்தமங்கலம், ராஜன் நகர் ஆகிய பகுதிகளில் அதிக அளவில் பூக்கள் பயிரிடப்பட்டு சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டுக்கு விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது.
நாளை கேரளாவில் முகூர்த்த நாள் என்பதாலும், தீபாவளி பண்டிகை நெருங்குவதாலும் பூக்களின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. சென்ற வாரம் 400 ரூபாய்க்கு விற்பனையான மல்லிகைப்பூ இன்று 1,200 ரூபாய்க்கும், 250 ரூபாய்க்கு விற்பனையான முல்லைப்பூ 450 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.