பொய்ச் செய்திகளும் வதந்திகளும் பரப்பப்படும்போது, பரப்புபவர்கள் யார், எங்கிருந்து பரப்புகிறார்கள் என்கிற விவரங்கள் தரப்பட வேண்டும் என்று வாட்ஸ்ஆப் நிறுவனத்திடம் மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.
வாட்ஸ்ஆப் நிறுவனத்தின் துணைத் தலைவர் கிரிஸ் டேனியல்ஸ், தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தை சந்தித்துப் பேசியுள்ளார். அப்போது இந்தியாவுக்கு குறைதீர்ப்பு அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளதை கிறிஸ் டேனியல்ஸ் உறுதிப்படுத்தியபோது, அந்த அதிகாரி இந்தியாவில் இருந்து செயல்பட வேண்டும் என வலியுறுத்தியதாக ரவிசங்கர் பிரசாத் கூறினார்.
தேர்தல்களின்போது கூட தகவல்களை பரிமாறிக்கொள்வதற்கு வாட்ஸ்ஆப் மிகவும் முக்கியமான கருவியாக உள்ள நிலையில், அதை யாரும் தவறாகப் பயன்டுத்திவிடாமல் நம்பகத்தன்மை பாதுகாக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியதாகவும் அமைச்சர் தெரிவித்தார். தவறான தகவல்களை பரப்புபவரின் இடம், அடையாளத்தை தரவேண்டும் என வலியுறுத்தியதாகவும் ரவிசங்கர் பிரசாத் கூறினார்.