ராஜஸ்தான் மாநிலத்தில் 22 பேருக்கு ஜிகா வைரஸ் நோய் தாக்கம் இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், இது தொடர்பான அறிக்கையை பிரதமர் மோடி கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மிகவும் ஆபத்தான ஜிகா வைரஸ் நோய் அறிகுறி, கடந்த மாதம் 24ஆம் தேதி, ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒருவருக்கு கண்டறியப்பட்டதாக கூறப்படுகிறது. அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், கடும் காய்ச்சல் உள்ளிட்ட உடல் உபாதைகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களின் ரத்த மாதிரிகளை சோதனை செய்ததில், மேலும் 21 பேருக்கு ஜிகா வைரஸ் நோய் தாக்கம் இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவர்கள் தனி வார்டுகளில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதனிடையே, ராஜஸ்தானில் ஜிகா வைரஸ் தொற்றுக்கு ஆளான மாணவர் ஒருவர், பீகார் மாநிலத்திற்கு சென்றதாக கூறப்படுவதால், அங்கும் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த மத்திய அரசு அறிவுறுத்தியது. இந்நிலையில், நோய் தாக்கம் குறித்த அறிக்கையை தாக்கல் செய்யுமாறு பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.