திருப்பூரில் வட்டாட்சியர் உள்ளிட்டோரின் கையெழுத்தை போலியாக போட்டு போலி சான்றிதழ் தயாரித்து வந்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருமுருகன்பூண்டியைச் சேர்ந்த மாசிலா வடிவு, திருப்பூர் வடக்கு தாலுகா அலுவலக வளாகத்தில், சான்றிதழ்கள் கேட்டு வரும் பொதுமக்களுக்கு மனு எழுதி கொடுத்து வந்துள்ளார். இவர் போலிச்சான்றிதழ் தயாரித்து கொடுப்பதாக வட்டாட்சியர் அலுவலக ஊழியர்களுக்கு சந்தேகம் எழுந்தது. இன்று போலிச்சான்றிதழ் தொடர்பாக, ஒருவரிடம் பேரம் பேசிக் கொண்டிருந்ததை பார்த்த அவர்கள், மாசிலாவடிவை பிடித்து திருப்பூர் வடக்கு போலீசில் ஒப்படைத்தனர்.
விசாரணையில், பொதுமக்களிடம் 2 நாள்களில் சான்றிதழ் பெற்று தருவதாக கூறி, அதிகாரிகளின் கையெழுத்தை தானே போட்டு, அரசு முத்திரையுடன் போலி சான்றிதழ் தயாரித்ததாக ஒப்புக் கொண்டார். சான்றிதழ் கேட்பவரின் அவசரத்துக்கு ஏற்ப சான்றிதழின் விலையை எட்டாயிரம் ரூபாய் வரை நிர்ணயித்ததாகவும் மாசிலாவடிவு கூறியுள்ளார். அவரிடம் ஏராளமான போலி சான்றிதழ்கள், அரசு முத்திரைகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.