பிரதமர் மோடியின் நான்கரை ஆண்டுகால ஆட்சியில் இந்தியா உறுதியான வளர்ச்சியை அடைந்துள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் தலைமைப் பொருளாதார வல்லுநர் மாரிஸ் ஆப்ஸ்ட்ஃபீல்ட் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசுகையில் மோடி அரசு கடந்த நான்கரை ஆண்டுகளில் கொண்டுவந்த ஜி.எஸ்.டி. மற்றும் திவால் சட்டம் உள்ளிட்ட சிறப்பான சீர்திருத்தங்கள் நாட்டின் முன்னேற்றத்துக்கு மிகவும் முக்கியமானவை என்றார். எனினும் கடந்த சில ஆண்டுகளில் வங்கி சாராத நிதிப் பரிவர்த்தனைகள் அதிகரித்து வருவது கவலைக்குரியது என்று அவர் கூறினார்.
மாரிஸ் ஆப்ஸ்ட்ஃபீல்ட் இந்த மாதம் ஓய்வு பெறவுள்ள நிலையில் அவரைத் தொடர்ந்து இந்தியரான கீதா கோபிநாத் அந்தப் பொறுப்புக்கு வருகிறார். கீதா கோபிநாத், ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரகுராம்ராஜனைத் தொடர்ந்து அந்தப் பொறுப்புக்கு வரும் இரண்டாவது இந்தியர் ஆவார்.