ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில், முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் மீது சட்டநடவடிக்கைகள் எடுப்பதற்கு மத்திய அரசிடம் உரிய அனுமதியைப் பெற்றிருப்பதாக டெல்லி நீதிமன்றத்தில் சிபிஐ தெரிவித்துள்ளது.
ஏர்செல்-மேக்சிஸ் ஒப்பந்தம் தொடர்பாக, 2006ஆம் ஆண்டில் அதிகார வரம்பை மீறி அந்நிய முதலீட்டு அனுமதி கொடுத்ததாக, மத்திய நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரம் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதற்கு கைமாறாக கார்த்தி சிதம்பரம் தொடர்புடைய நிறுவனத்தின் மூலம் 26 லட்ச ரூபாய் பெற்றதாகவும் அமலாக்கத்துறை குற்றம்சாட்டியிருந்தது.
இந்த விவகாரத்தில் டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை கடந்த 25ஆம் தேதி கூடுதல் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்தது. ப.சிதம்பரம் முதலாவது எதிரியாக குற்றம்சாட்டப்பட்டிருந்தார். இந்நிலையில், சிதம்பரத்தின் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு, மத்திய அரசிடமிருந்து உரிய அனுமதியைப் பெற்றிருப்பதாக இன்று சிபிஐ தெரிவித்தது. இருப்பினும் ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தியை கைது செய்வதற்கான இடைக்கால தடையை டிசம்பர் 18ஆம் தேதி வரை நீட்டித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.