ஆட்சியை பிடிக்கப் போவது யார்? வாக்கு எண்ணிக்கை துவங்கியது

நாடு முழுவதும் 542 மக்களவை தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி துவங்கியது.

புதுடெல்லி,
இந்திய நாடாளுமன்ற தேர்தல் உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவாக கருதப்படு கிறது. 17-வது நாடாளுமன்றத்தை தேர்ந்தெடுக்க ஏப்ரல் மாதம் 11-ந் தேதி தொடங்கி கடந்த 19-ந் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. நாடு முழுவதும் மொத்தம் உள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகளில் வேலூர் நீங்கலாக 542 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்தது. தமிழகத்தில் 38 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், காலியாக இருக்கும் 22 சட்டசபை தொகுதிகளுக்கும் தேர்தல் நடந்தது.
அத்துடன் ஆந்திரா, ஒடிசா, அருணாசலபிரதேசம், சிக்கிம் ஆகிய 4 மாநில சட்டசபைகளுக்கும் தேர்தல் நடந்து இருக்கிறது. கடந்த 19-ந் தேதியுடன் தேர்தல் முடிவடைந்ததை தொடர்ந்து நாடு முழுவதும் இன்று காலை 8 மணிக்கு சரியாக ஓட்டு எண்ணிக்கை துவங்கியது. வாக்கு எண்ணிக்கையை ஒட்டி, வாக்குச்சாவடிகள் வைக்கப்பட்டுள்ள மையங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முதலில் தபால் ஓட்டுக்கள் எண்ணப்படுகின்றன. அதன்பிறகு சுற்று வாரியாக வாக்குகள் எண்ணப்பட்டு முன்னிலை நிலவரங்கள் அறிவிக்கப்படும்.
வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான ஓட்டுகளை சரிபார்ப்பதற்காக இந்த முறை ஒப்புகைச் சீட்டு இயந்திரங்களில் உள்ள சீட்டுகளையும் சேர்த்து எண்ணுவதற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  அந்த வகையில், ஒரு மக்களவை தொகுதிக்குட்பட்ட ஒவ்வொரு சட்டப்பேரவை தொகுதியிலும் தலா 5 ஒப்புகைச் சீட்டு எந்திரம்  என்ற வகையில் விவிபாட்  இயந்திரங்களில் உள்ள சீட்டுகளையும் எண்ணப்படுகிறது.
எனவே மத்தியில் ஆட்சியை பிடிக்கப்போவது யார்? என்பது இன்று தெரிந்துவிடும். இதேபோல் ஆந்திரா, ஒடிசா, அருணாசல பிரதேசம், சிக்கிம் மாநிலங்களில் எந்த கட்சி ஆட்சி அமைக்கும் என்பதும் தெரிந்துவிடும். 542 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றுள்ள நிலையில், தனிப்பெரும்பான்மைக்கு  272 தொகுதிகளில் வெற்றி பெறவேண்டும்.  தமிழகத்தில் 45 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகளுடன், 22 சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளும் எண்ணப்பட்டு வருகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *