கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே, 80 ஆண்டுகள் பழைமை வாய்ந்த வல்லம்படுகை ரயில் நிலையத்தை மூடப்போவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
சிதம்பரம்- கொள்ளிடம் ரயில் நிலையங்களுக்கு இடையே உள்ள வல்லம்படுகை ரயில் நிலையம் மூடப்படுகிறது. இதற்கான அறிவிப்பு ரயில் நிலையத்தில் ஒட்டப்பட்டுள்ளது. வல்லம்படுகை உள்ளிட்ட இருபதுக்கும் மேற்பட்ட கிராம மக்களின் நலன்கருதி இந்த ரயில் நிலையத்தை மூடக் கூடாது என வலியுறுத்தி திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் உள்ளிட்ட அதிகாரிகளை சந்தித்து பொதுமக்கள் மனு அளித்துள்ளனர். விவசாயிகள் தங்கள் விளைச்சல்களைக் கொண்டு செல்ல இந்த ரயில் நிலையத்தை நாடியிருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திற்கு ஏராளமான மாணவர்கள் படிக்க செல்வதற்கு இந்த ரயில் நிலையத்திற்கு வரும் ரயில்களையே நம்பியுள்ளனர். இத்தகைய நிலையில் ரயில் நிலையத்தை மூடாமல் இருக்க மூன்று மாத அவகாசம் அளிப்பதாகவும் அதிக வருவாயை ஈட்டும் பட்சத்தில் ரயில் நிலையத்தை மூட மாட்டோம் என்றும் அதிகாரிகள் உறுதியளித்தனர்.