பணமதிப்பிழப்புக்குப் பிறகு நடைபெற்ற வருமான வரித்துறை சோதனையில் அதிக ரொக்கம் தமிழகத்தில்தான் பறிமுதல் செய்யப்பட்டுளதாக வருமான வரித்துறையினர் தெரிவித்துள்ளனர்.
வரி ஏய்ப்பு செய்ததாக எழுந்த புகாரின்பேரில், எஸ்.பி.கே குழும உரிமையாளரும், நெடுஞ்சாலை ஒப்பந்ததாரருமான செய்யாத்துரை, அவரது மகன் நாகராஜன் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. இந்த சோதனையில் 180 கோடி ரூபாய் ரொக்கம், 105 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக வருமானவரித்துறை கூறியுள்ளது.
செய்யாத்துரையில் வங்கி லாக்கரில் உள்ள தங்கம், கைப்பற்றப்பட்ட தங்கம் உள்ளிட்ட நகைகளை மதிப்பீடு செய்து, அதுகுறித்து செய்யாத்துரையிடம் விளக்கம் கேட்கப்பட்டது. இதனிடையே, சென்னை மயிலாப்பூர் வீரபெருமாள் கோவில் தெருவில் வசிக்கும் செய்யாத்துரை நண்பரான, பூமிநாதனிடமும் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். நேற்று பூமிநாதன் வீட்டில் வருமான வரித்துறை நடத்திய சோதனையில், 30 கோடி ரூபாய் ரொக்கம் சிக்கியது. அது தொடர்பாக பூமிநாதனிடம் அதிகாரிகள் பலமணி நேரம் விசாரணை நடத்தினர்.
இதனிடையே, சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்தினால்தான் உண்மை வெளிச்சத்துக்கு வரும் எனக் கூறினார். நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித்துறை ஊழலுக்கு பொறுபேற்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டுமெனவும் ஸ்டாலின் வலியுறுத்தினார். எஸ்.பி.கே குழுமத்தில் நடத்தப்பட்ட சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட ரொக்கம்தான் என்பது குறிப்பிடத்தக்கது.