காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஆட்சியில் இருந்தபோது, 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டு விவகாரத்தில், முறைகேடு நடைபெற்றதாகப் புகார் எழுந்தது. இதனால், அரசுக்கு 1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டதாக, மத்திய கணக்குத் தணிக்கைத்துறை தெரிவித்தது. நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இவ்விவகாரத்தில், முன்னாள் மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசா, திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி உள்பட 14 பேர் மீது சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கு விசாரணை கடந்த 6 ஆண்டு காலமாக டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஓ.பி.ஷைனி முன்னிலையில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் கடந்த ஏப்ரல் மாதம் இறுதி விசாரணை முடிவடைந்து தீர்ப்பு, தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கின் தீர்ப்பு, அடுத்த மாதம் 25ம் தேதி வழங்கப்படும் என்று, நேற்று நீதிபதி ஓ.பி.ஷைனி அறிவித்தார். தீர்ப்பு வழங்க மேலும் கால அவகாசம் தேவை என்று தெரிவித்த நீதிபதி ஷைனி, அடுத்த மாதம் 25ம் தேதியில் தீர்ப்பு வழங்கப்பட முடியாவிட்டாலும், 28 ஆம் தேதிக்குள் தீர்ப்பு வழங்கப்படும் என்றும் கூறினார்.
2017-09-21