17 லட்சத்தை தாண்டியது தமிழக அரசின் குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை; டிஎன்பிஎஸ்சி வரலாற்றில் இதுவே முதல்முறை என தகவல்…

டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வுகளுக்கு விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை முதன்முறையாக 17 லட்சத்தை தாண்டியுள்ளது.

டி.என்.பி.எஸ்.சி குரூப்- 4 தேர்வு பிப்ரவரி 11-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் காலம் நேற்று இரவுடன் முடிவுற்றது. 9 ஆயிரத்து 351 காலிப் பணியிடங்களுக்கு நடைபெறும் தேர்வுக்கு 17 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் டிஎன்பிஎஸ்சிக்கு விண்ணப்பிக்கும் தேதியை நீட்டிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதனை தொலைபேசியில் தொடர்பு கொண்ட மு.க.ஸ்டாலின், ஒக்கி புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்கள் டி.என்.பி.எஸ்.சி. தேர்வுக்கு இணையதளத்தில் விண்ணப்பிக்க முடியாமல் இருப்பதாகவும், இதனால் டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தேதியை நீட்டிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *