உயர்நீதிமன்றத்தையும், போலீசாரையும் இழிவாகப் பேசியதாக பா.ஜ.க. தேசியச் செயலாளர் ஹெச். ராஜா மீது 8 பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்துள்ள நிலையில், விரைவில் அவரை கைது செய்ய வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் வலியுறுத்தியுள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே மெய்யபுரத்தில், சனிக்கிழமையன்று தடையை மீறி நடந்த விநாயகர் ஊர்வலத்தில் பா.ஜ.க. தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா பங்கேற்றார். அப்போது, போலீசாருடன் கடும் வாக்குவாதம் செய்த அவர், உயர்நீதிமன்றத்தையும், போலீசாரையும் இழிவான வார்த்தைகளில் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த குற்றச்சாட்டை ஹெச்.ராஜா மறுத்துவிட்ட நிலையில், பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல், அனுமதியின்றி கூடுதல் உள்ளிட்ட 8 பிரிவுகளின்கீழ் ஹெச்.ராஜா உள்ளிட்டோர் மீது திருமயம் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இதையடுத்து ஹெச்.ராஜா தலைமறைவானதாக கூறப்படுவதால், அவரை கைது செய்ய திருமயம் காவல் ஆய்வாளர் மனோகரன், பொன்னமராவதி காவல் ஆய்வாளர் கருணாகரன் தலைமையில் 2 தனிப்படைகளும் அமைக்கப் பட்டுள்ளன.
இந்நிலையில், உயர்நீதிமன்றத்தை இழிவாக பேசிய ஹெச்.ராஜாவை கைது செய்ய வேண்டும் என அரசியல் கட்சித்தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.